Nov 11, 2020
அம்பையின் ஆருடம் ...
Sep 2, 2020
தலைநகரமாகுமா ? தூங்காநகரம் ?
விஷன் ஸ்டேட்மண்ட் 2023 " கூறும் போது ஸ்மார்ட்சிட்டியாக மாறிவரும் மதுரையைத் தலைநகராகுதல் சாத்தியமே!
Aug 19, 2020
சுதாம்மா…
திருமதி .சுதாமூர்த்தி
கையில் ஒரு சுருக்குப்பையோடும் பரபரத்தக் கண்களோடும் தான் செல்லவிருக்கும் ஊர்ப் பெயரினைச் சொல்லி " இந்த பஸ் வந்தா சொல்லு கண்ணு" என்று கூறிக் கடந்து போகும் ஒவ்வொரு பேருந்தும் தான் செல்ல வேண்டியதுதானோ என்ற ஐயத்தில் நாம் வாசித்துச் சொல்லமாட்டோமா என்ற ஏக்கத்தில் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கும் கண்களைப் பல நேரங்களில் நாம் கடந்திருப்போம்…
போகட்டும் கதைக்குள் நுழைவோம் !
1960-களில் கன்னட மொழியில் வெளிவந்த 'கர்ம வீரா' என்னும் வாரப் பத்திரிக்கையில் ' காசி யாத்திரை'. என்னும் தொடர் கதை மிகவும் பிரபலம். ஒவ்வொரு புதனும் இந்த 12 வயதுப் பேத்தி வாசிப்பறியா தன் 62 வயது பாட்டிக்குக் காசி யாத்திரையைப் படித்துக் காட்டுவார். கற்பனையின் கருணையால் ஒவ்வொரு புதனும் இவ்விருவரும் காசிக்குச் சென்று வந்தனர். ஒரு நாள் பக்கத்து ஊரில் நடந்தத் திருமணத்திற்கு அவர் பேத்தி சென்றுவிட வாசித்துக் காட்ட ஆள் இல்லாமல் போக அந்தக் கற்பனை யாத்திரை தடைப்பட்டுப் போனது.
யாரிடமாவது கேட்கலாமா? என்றக் கேள்வி ஒருபுறம், தன்னை ஏளனம் செய்து விடுவாரோ என்ற தயக்கம் ஒருபுறம், இவற்றின் நடுவே கெட்டியான முடிவோடு நாமே வாசித்துப் பார்ப்போம்" என்று எழுத்துகளினூடேத் தன் விரல்கள் மெல்லப் படர , நேரம் கடந்தும் அடுத்த எழுத்திற்குக்கூட நகராதத் அவரின் விரல்கள் இப்போது தன் கன்னத்தில் உருண்டோடும் கண்ணீரைத் துடைக்க ஆயத்தமாகின.
சற்றே நேரத்தில் துவண்டு போன அந்த முகத்தில் இப்போது ஓர் தெளிவு. உடனடியாக ஆனால் சற்றே தீர்க்கமான முடிவு தோன்றியது. " அடுத்தத் தசரா பண்டிகைக்குள் தான் எழுத்து கற்க வேண்டும் என்று ! " ஊர் திரும்பிய பேத்தியிடம் தன் முடிவைக் கூற அவரும் அதற்கு ஒப்புக்கொள்ள எழுத்தில் ஆரம்பித்தப் பாடம் வார்த்தையாகவும் பின் வாக்கியமாகவும் விரைந்து ஓட , தசராவும் வந்துவிட்டது ...
பண்டிகையின் ஒரு பகுதியாகக் கற்பித்த ஆசானுக்கு வணக்கம் செய்யும் முறை அங்கிருந்தது. அன்று காலை தன்னைப் பார்க்க வந்தப் பேத்தியை பூஜையறையில் நிறுத்தி, சற்றும் தயக்கமில்லாமல் அந்தப் பன்னிரண்டு வயது ஆசானின் கால்களை 62 வயது மாணவி தொட்டு வணங்கினார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத பேத்தி தான் வாங்கி வந்த புத்தகத்தைத் தன் பாட்டிக்குப் பரிசளிக்க அவர் மெல்ல அந்த நூலின் தலைப்பில் விரல் வைத்து " கா -சி- யா - த் -தி - ரை " என்று திடமான குரலில் அவர் வாசிக்க, தான் எதிர்பாராதது நடந்தேறியது என்று எண்ணிப் பேத்தியின் கண்களிலும், தான் இத்தனை வருடங்கள் எதிர்பார்த்தது நடந்தேறியது என்ற மகிழ்வில் பாட்டியின் கண்களும் ஒருசேரக் கலங்கின.
(இப்போது நாம் முதலில் கண்ட சுருக்குப்பை பாட்டியில் ஏக்கம் புரிகிறதா?)
இந்தக் கதையை நீங்கள் எங்காவது கடந்து வந்திருக்கலாம் . கதை என்றா சொன்னேன் ? இல்லை இல்லை ! திருத்தம் : இது உண்மைச் சம்பவம் .
அந்தப் பன்னிரண்டு வயது ஆசான் தான் இன்றைக்கு இன்போசிஸ் குழுமத்தின் தலைவர் பத்மஸ்ரீ .திருமதி சுதா மூர்த்தி அவர்கள்.
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்களில் ஒருவர் என்றதும் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு வருவது போல் இந்தியாவின் முதல் பெண் பொறியாளர் என்றதும் திருமதி சுதா மூர்த்தி அவர்களின் பெயரை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எளிமையானக் குடும்பத்தில் கர்நாடகாவில் பிறந்து தன் முதுகலை பொறியியல் பட்டத்தை IIT பெங்களூருவில் பல கட்டுப்பாடுகளினூடே, 599 ஆண்களுக்கு மத்தியில் ஒரே பெண்ணாக தங்கப்பதக்கதோடு பெற்ற இவருக்கு அன்றைய நிலையில் வேலை இல்லை!!
வேலை இல்லையே என்று வருந்தாமல் உடனடியாக டாட்டா குழுமத்தின் தலைவருக்கு , ஆண்களுக்கு மட்டுமாபொறியியல் ? என்ற கேள்வியை விடுத்து இத்துறைக்குப் பெண்களின் முக்கியத்துவம் குறித்தும் கடிதம் எழுதினார். உடனடியாக நேர்காணலுக்கு அழைப்பு . பணியமர்த்தப்பட்ட முதல் பெண் பொறியாளர் என்ற பட்டத்திற்குச் சொந்தக்காரர் திருமதி சுதா மூர்த்தி அவர்கள் . பின்னர் திரு . நாராயணமூர்த்தியோடு திருமணம். 1981இல் தொடங்கப்பட்டது இன்போசிஸ் நிறுவனம். கணவரோடு இணைந்து 1996இல் தொடங்கியது இன்போசிஸ் அறக்கட்டளை.
பொதுவாகக் காசியோ ராமேஸ்வரமோ சென்றால் ஏதேனும் ஓர் பழக்கத்தை விட்டுவர வேண்டும் என்ற நம்பிக்கை உண்டல்லவா ?
( இதைத் தவறாக புரிந்து கொண்ட நம் மக்கள் பழைய ஆடைகளை நீரில் விட்டு வருவது போல் இல்லாமல்… )
ஆடம்பர நோக்கிலும் அவசியம் இல்லாமலும் தனக்காக பொருட்களை வாங்கும் பழக்கத்தைக் கைவிட்டார் காசியில் ! அன்றிலிருந்து 22 வருடங்கள் 2480 " கோடிக்குச் சொந்தக்காரர் தனக்கென ஒரு சேலை வாங்கி 22 வருடங்கள் ஆகிறது என்று கூறியவுடன் மறுமுறை இந்த வாக்கியத்தை வாசிக்க ஏதோ தூண்டுகிறதல்லவா?
தான் படித்த காலங்களில் பெண்களுக்ககெனத் தனி கழிவறை இல்லாததை நினைவில் கொண்டு, இன்றைக்கு இந்தியா முழுவதும் 16 ஆயிரம் கழிவறைகள் இவரது அறக்கட்டளை வாயிலாகக் கட்டப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நூலகம் மற்றும் கணினி வசதிகள் ஏற்படுத்தக் காரணியாக இருந்தவர்.
மேடம் என்கிற மரியாதை மொழி மாறி அம்மா என்கிற அன்பு மொழி சொல்லி அழைக்க அடித்தளமிட்டது இவரது சேவை கரங்கள்.
2001-ல் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் ஆறு நாவல்கள் ,2 பயணக் கட்டுரைகள், தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் எனக் கன்னட மொழியிலும் ஆங்கிலத்திலும் இவர் எழுதிய புத்தகங்கள் ஏராளம்
மராத்தியிலும்,ஹிந்தியிலும் இவரின் மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள் வெளிவருவது போலத் தமிழில் வெளிவராதது வருத்தமே.... பத்மஸ்ரீ விருதாளர் , 2018-ல் வாழ்நாள் சாதனையாளர் விருதும் கிடைத்தது. இன்றோடு 70 வயதாம் ! ( பிளாட்டினம் ஜூபிலி) "வன் - பொன்விழா" என்று நாம் வைத்துக்கொள்வோம்! தன் இருபதுகளில் தொடங்கிய இவரது சமூக நாட்டம், எளிமையாக, எதிர்பார்ப்பின்றி எழுபதுகளிலும் சிறப்புற நடத்திச் செல்கிறார்.
இவர் எழுத்துகள் எனக்கு அறிமுகமானது என் பத்தாவது வயதில்! எழுத்துகளில் கூட ஆடம்பரம் இல்லை! எளிமையாக வாழ்ந்த தலைவர்" என்றுக் கதைகளில் கேட்ட நம்மக்குக் கண்முன்னேத் தோன்றும் அடடம்பரமில்லா அழகு தேவதை சுதாம்மா !
ஒரு வேண்டுகோள்…
சீற்றம் இல்லாச் சிறு கடல் போன்ற இவரின் எழுத்துகளினூடே பயணித்துப் பார்க்க உங்கள் துடுப்புகளை ஆயத்தப் படுத்துங்கள் !
இனிய "வன் - பொன்விழா" வாழ்த்துகள் சுதாம்மா !
🖋
- ஆ .திவ்ய பிரபா







